Wednesday, 25 October 2017

வேரில் அழுகிறேன்

மரமாக நின்று கொண்டிருக்கிறேன்

இதோ

மரங்கொத்தியாய் வரும் அவள் நினைவுகளோ

கொத்தி கொத்தி துளையிடுகிறது

என் மனம் முழுவதும்

நீங்கள் யாரும் அறிவதில்லை

நான் வேரில் அழுவதை

Wednesday, 20 September 2017

கண்ணில் சுடும் மழைக்காலம்

உன் ஊரில்
உன் வீதியில்
உன் வாசலிலெல்லாம் எப்படியோ
ஆனால்
என் ஊரில்
என் வீதியில்
என் வாசலில்
உனக்கு பின்னரான நாட்களில்
மழையென்ற பெயரில்
பொழிந்து போவதெல்லாம்
உன் நினைவுகள் மட்டும் சகியே...
*
மழையும் வெயிலும் சேர்ந்தே பொழியும்
இந்த பின்மதிய வேளை
எல்லோருக்கும் எப்படியோ?
ஆனால் எனக்கோ
அழுகையும் தந்து ஆறுதலும் தரும்
உன் நினைவைப் போலிருக்கிறது...
*
கோடை மதியமொன்றில்
கொட்டித் தீர்த்த மழையை
சூட்டை கிளப்பி போனதாக
சொல்லிப் புலம்புகிறார்கள் அவர்கள்
நானும் புலம்புகிறேன் எனக்குள்ளே
உன் நினைவை கிளப்பி போனதாக...
*
உனக்கொன்று தெரியுமா சகியே
அடைமழையின்
இரவு காலங்களில்
நான்
போர்த்திக் கொள்வதெல்லாம்
உன் நினவுகளைதான் என்று....
*
"மழை நேரத்துல வெளியே போகாதீங்க
அப்புறம் நனைஞ்சுட்டு வந்து
காய்ச்சல் அது இதுனா
நான் மனுஷியா இருக்க மாட்டேன்"
கொஞ்சமும் அழியாமல்தான் வருகிறது
கொட்டிப்போன அன்பின் வார்த்தையெல்லாம்
கொட்டித் தீர்க்கும் இம்மழையோடு...
*
காயப்போட்ட துணிகளை எடுக்கவும்
மொட்டைமாடி வடகம் அள்ளவும்
குடைமறந்த கணவன் குறித்தும்
பதறி கொண்டிருக்கிறாய் நீ
மழைவிழத் துவங்கும் இவ்வேளையில்
நானும் பதறிதான் துடிக்கிறேன்
ஆம் சகியே
மழை கொண்டு வரும்
உன் நினைவுகளை எண்ணி ...

Monday, 7 August 2017

மருத்துவ முத்தம்

மருத்துவ முத்தம்

நிதமும் நோய் தந்து போகிறது

நின் நினைவின் முத்தங்கள்

இன்னுமேன்  தாமதம்

இதழ் கொண்டு வா சகியே

இப்போது எனக்கான தேவையெல்லாம்

ஒரே ஒரு மருத்துவ முத்தம்

Wednesday, 26 July 2017

தொலைந்து போன உன் காதல்

கடைசி பேருந்து வரை

காத்திருந்து விட்டுதான் வருகிறேன்

ஒவ்வொரு நாள் முடிவிலும்

என்றாவது வந்து விடாதா?

'தொலைந்து போன உன் காதல்'

Thursday, 13 July 2017

ஞாபகமில்லையா என் தோழி

சிறு மழலையின் தீண்டல்

துளி மழையின் தீண்டல்

ஒரு மலரின் தீண்டல்

ஞாபகப்படுத்தி விடுகிறது

உன் முத்த ஸ்பரிசங்களை

என்னை ஞாபகப்படுத்ததான் எதுவுமில்லை

இயல்பாய் சுற்றும் உன் பூமியில்

சரி

ஒன்று மட்டும் சொல்லடி சகியே

என் ஞாபகங்களையெல்லாம் மூட்டைக்கட்டி

எந்த சமுத்திரத்தில் எறிந்தாய்...?

Monday, 10 July 2017

அமில முத்தங்கள்

தேன் சொட்ட தந்த
தெவிட்டாத முத்தங்களெல்லாம்
தீர்ந்து போன ஓர் நாளில்
மறக்கச் சொல்லி சென்றாய்
ஆனாலும் சகியே
முத்த தினமெல்லாம்
முடிந்துபோன பின்பும்
முடிந்தபாடில்லை
முடிந்துபோன காதலின் கருணை
ஆமாம்.. இதோ..
நினைவின் இதழேறி வரும்
நின் முத்தங்களெல்லாம்
நெஞ்சமெங்கும் தடம் பதிக்கிறது
இப்போது
அமிலம் பட்டதாய் அலறித் துடிக்கும்
அன்பால் சாகும் உயிரின் சத்தம்
காற்றின் சிறகேறி வருகிறது
"கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே"

Friday, 7 July 2017

என் இரவைக் கூறு போட

எப்படியாவது தூங்கிவிட வேண்டும்
உன்னை நினைக்காமல் இன்றிரவு
ஆமாம்
சபதம் எடுத்துக் கொண்டேன்
பண்பலை பாடல்கள் தாலாட்டிக் கொண்டிருந்தது
இமைகள் இறுகத் துவங்கிய வேளை
உயிருக்குள் ஒலிக்கத் துவங்கியது
உனைப் பாடச் சொல்லிக் கேட்ட
"ஊருசனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சி"
இசைஞானி மெல்லிசை மன்னரோடு
இப்போது
கூட்டனி சேர்ந்திருந்தது உன் நினைவுகளும்
என் இரவைக் கூறு போட....

Thursday, 29 June 2017

உன் நினைவின் சாரல்

காற்றின் முதுகில் பயணித்து வரும்
மேற்கு தொடர்ச்சி மலையின் சாரல்
என் சன்னல் வழி நுழைந்து
உறங்கிக் கொண்டிருந்த
உன் நினைவுகளின் முகத்தில்
நீரையள்ளித் தெளித்துப் போகிறது
விழித்த நினைவுகளோ
வேலையை காட்டுகிறது இப்போது
ஆம் சகியே...
காற்றலையில் மிதக்க விட்டுப் போன
உன் காதல் சொற்களெல்லாம்
இதோ
என் உயிர் கூட்டில் எதிரொலிக்கிறது
"மழை பெய்யும் போது
சன்னலை சாத்திட்டு தூங்குங்க" என்று
இனி
இந்த இரவு முழுவதும்
உன் நினைவின் சாரலையெல்லாம்
கனமழையாய் கொட்டித் தீர்க்க கூடும் 
விழித்துக் கிடக்கும் என் விழிகள்

Saturday, 3 June 2017

விழியில் வழியும் நினைவு

வெளிச்சம் கொண்டுவரும்
அந்த நிலா
விட்டு போன
உன் நினைவுகளையும்
கொண்டு வருவதுதான்
எத்தனை துயரமடி சகியே...
ஜன்னலடைத்து
நிலவை மறைத்துவிட்டேன்
இதோ
இப்போது
விழியுடைத்து வழியும்
உன் நினைவை என்ன செய்ய?

Friday, 26 May 2017

நினைவின் வாசம்

'இன்னொரு முறை
குடிக்கும் போது
எனக்கொரு பாட்டில்
விஷத்தை வாங்கித் தாருங்கள்'
உனக்கென்னடி சகியே
சொல்லிவிட்டு போய்விட்டாய்
இதோ
துளித் துளியாய் பருகும்
வோட்காவிற்கு
"உன் நினைவின் வாசம்"

Friday, 14 April 2017

உயிரின் ஓலம்

கிளையுதிரும் சருகுகள்
கூடடையும் பறவைகள்
சிறு சிறு தூறல்கள்
மழை வரும் அறிகுறியால்
உன் பாதை விரைகிறாய்
மேகம் பூமியோடு முத்தமிடும்
சுகந்த மணம் கடத்தி வரும்
குளிர் காற்றின் கைப் பிடித்து
கூடவே வரும் 
சர்பமொன்றின் வாயில் அகப்பட்ட
தவளையின் ஓலக் குரலை
கேட்டும் கேளாமல் போகிறாய் நீ
உனக்கொன்று தெரியுமா சகியே?
அது
உன் நினைவின் வாயில் அகப்பட்டு
மரண வலியில் கதறும்
என் உயிரின் ஓலக் குரலென்று

Thursday, 6 April 2017

கனக்கும் கவிதை

என் கவிதைகளில்
இறக்கி வைக்கிறேன்
உன்
நினைவுகளின் பாரத்தை
இதோ
இப்போது
வலியோடு
கனத்து கிடக்கிறது
என் மனதை போலவே
உன் நினைவை சுமக்கும்
என் கவிதைகளும்...

Saturday, 1 April 2017

இது காதல் ஆயுதம்

விஷ்ணு சக்கரமெடுத்தான்

சிவன் சூலமெடுத்தான்

முருகன் வேலெடுத்தான்

அனுமன் கதையெடுத்தான்

ராமன் வில்லெடுத்தான்

நாத்திகன் நானோ
காதலை கடவுளென்றேன்

அதோ
அவள் நினைவெடுத்து வருகிறது...

Saturday, 25 March 2017

காதல் என்றுதான் பெயர்

இருட்டை வெரித்து 
விழித்தே கிடக்கும்
என் ஒவ்வொரு இரவுகளையும்
இரத்தம் சொட்ட சொட்ட
சிலுவையிலடிக்க வரும் 
உன் கூர் நினைவுகளுக்கு
எனது அகராதியில்
இப்போதும்
காதல் என்றுதான் பெயர்

Saturday, 18 March 2017

நினைவின் தாகம்

கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் குடிக்கிறது

எத்தனை தாகமடி

உன் நினைவுகளுக்கு...

Tuesday, 14 February 2017

காதலின் ஞாபக மழை

இன்னைக்கு என்ன நாள் தெரியுமா லூசு?

என்ன நாள்?

காதலர் தினம்னு சொல்லிக்கிறாங்க

அதுக்கு?

ம்ம்ம்.. அதுக்கு ஒன்னுமில்ல

நாம காதலர்களா?

இல்ல...

பின்ன.. நாம யாராம்?

கணவன் மனைவி

பின்ன என்னடி
நாமதான் தினமும் கொண்டாடுறோமே காதலர் தினத்தை

ம்ம்ம்... ஆமா... 'ஐ லவ் யூ'

"ஐ லவ் யூ டா"...

சரி.. சரி..
காதலர் தினமாம் இன்று
காதலின் ஞாபக மழையில்
கண்கள் நனையும் வேளையில்
காரணம் யாரேனும் கேட்டால்.
காற்றின் மீது பழியை போட்டு விடு
என்னைப் போலவே நீயும்
கண்களில் தூசி விழுந்ததென்று

Thursday, 2 February 2017

நினைவு சர்பங்கள்

முதுகுத்தண்டில் ஊர்ந்து
மூளையில் நின்றாடி
நாடி நரம்புகளில் நகர்ந்து
இதயத்தில் இறங்கி
இறுகிப் பிணைந்து
உயிர்த் தீண்டிப் போகிறது
உன் நினைவு சர்பங்கள்
இதோ
இன்றைய விடியலிலும்
வானம் வெறித்து
வாயில் நுரைத் தள்ளி
இறந்து கிடக்கிறது
என் துயிலா இரவுகள்...

Wednesday, 25 January 2017

சொல்லடி சகியே

காதல் உரமிட்டு
செழிப்பாய்தான் வளர்திருந்தாய்
பச்சைப் பசேலென
என் வாழ்க்கைச் சமவெளியை
இதோ
நீயற்ற பொழுதுகளில்
உன் நினைவின் பற்களுக்கு
கொஞ்சம் கொஞ்சமாய் இரையாகும்
என் உயிரின் அழுகுரல்
கொஞ்சம் சன்னமாகவாவது கேட்கிறதா உனக்கு?

Friday, 20 January 2017

வேதாள நினைவுகள்

என்ன கதை சொல்லி இறக்கி விட

என் இதய முதுகிலேறி

கூடவே வரும்

உன் வேதாள நினைவுகளை

தேடலில் கிடைக்காதவன்

கானும் பொங்கல் இன்று
காடு
கரை
கழனி
ஆறு
அருவி
மலை
கோவில்
குளம்
கண்டுதான் வந்தேன் நான்
இன்னும் என்னென்னவோ.
காதல் திருவிழாவில்
தொலைந்த என்னையும்
தொலைத்த அவளையும் தவிர...

நினைவுப் புத்தகங்கள்

வாழ்நாள் வாசகனாக்கி விட்டாய் என்னை

என் இதய அலமாரியெங்கும் நிரம்பியிருக்கும்

உன் நினைவு புத்தகங்களுக்கு...

Monday, 9 January 2017

நினைவின் கனங்கள்

யாரோ ஒருவர் கையைப் பிடித்து நடக்கும்
கோவில் திருவிழாவில்
வழி தப்பிய சிறுவனாய்
உன் நினைவுகளை பிடித்துக் கொண்டு
காதல் திருவிழாவில் தொலைந்த நான்

காதல் கோவிலின் வாசல் அது
கை நீட்டுகிறேன் உன்னிடம்
யாசிக்கும் ஏழையாய் நான்
காணிக்கையிட்டு போகிறாய்
வாரி வழங்கும் வள்ளலாய் நீ
நிறைய நிறையவே நினைவுகளை

சவம் என்னா கனம் கனக்கு
தூக்குபவர்கள் சொல்வார்கள் கண்டிப்பாக
நாளை நான் செத்தப் பிறகு
ஆமாம்
ஜென்மத்துக்கும் சேர்த்து வைத்த
உன் நினைவின் கனமும் என்னோடல்லவா

எல்லோரும் சொல்கிறார்கள்
பித்து நிலையில் இருப்பதாக என்னை
அவர்களுக்கெப்படி தெரியும்
உன்னையே நினைத்து உன்னையே உளரும் நான்
முக்தி நிலையில் இருப்பது

ஜன்னலோர பயணியாய் நான்
அதோ கை வீசி வருகிறது
உன் நினைவுகள்
கண்ணீர் வரவழைக்கும் காற்றாக
அதனாலென்ன
ஜன்னலோர பயணமே இரசிக்கதானே

ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு கிளியிடமெல்லாம் இல்லை
என்னை மறந்து விடுங்கள் என்ற
உன் ஒற்றை வார்த்தையில்தான்
கொஞ்சம் கொஞ்சமாய் போய்க்  கொண்டிருக்கிறது
இந்த காதல் ராஜாவின் உயிர்

Wednesday, 4 January 2017

நினைவுச் சங்கிலி

அப்படி
எங்கேதான் ஓடி விட முடியும் என்னால்
உன் நினைவுச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு
பெண்ணே....
நீயாவாது சொல்லடி
என் கால்களில் சங்கிலியிட வேண்டாமென்று