"மெல்ல நெருங்கிடும் போது
நீ தூர போகிறாய்!
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்"
பிடித்த பாடலென்று
காதுக்குள் பாடிச்சென்றாய் ஓர்நாள்.
இதோ நீயில்லா இந்நொடியில்
ஒரு கூர்வாளை போல
இதயம் நுழைகிறது அப்பாடல்
என்னை இத்தனை துன்புறுத்தும்
இளையராஜாவையும்
நினைவில் விடம் வைத்து போன
உன்னையும்
ஏன் நான் கொலை செய்யக் கூடாது..?
கத்தியை கூர்தீட்டிக் கொண்டே
கடைசியாக ஒருமுறை கேட்கிறேன்
"எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே"
கடைசியாக இன்னொருமுறை
"என்னைப் பிடித்த நிலவும்
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே"
இன்னொருமுறை
இன்னொருமுறை
இன்னொருமுறை
...
ஒவ்வொரு நாளின் கொலை முயற்சியிலும்
இப்படித்தான்
என் கத்தியின் முனை உடைகிறது
இனி நீங்கள் அதை
மொன்னைக் கத்தி என்பீர்கள்
சொன்னால் நம்புங்கள்
'அதன் பெயர் காதல்'