Thursday, 26 July 2018

எழுத இயலாத கவிதை

கால்களில் மலைகளை கட்டிக்கொண்டு
நத்தையென ஊரும் வாழ்க்கையை
என்னால் எழுத இயலாது

இறகென மிதந்த நினைவுகளெல்லாம்
கல்மூட்டையென கனப்பதை
என்னால் எழுத இயலாது

உறக்கங்களை மறிக்கச் செய்யும்
நாகம் துரத்தும் கனவுகளை
என்னால் எழுத இயலாது

உயிர் விட்டுப் போன பின்பும்
வெற்றுக் கூடுகளாய்
உடல்களிரண்டு உலகில் உலாவுவதை
என்னால் எழுத இயலாது

பிரிகின்ற தருணங்களில் விளையும்
உப்பு கரிக்கும் முத்தங்களை
ஒருபோதும்
என்னால் எழுத இயலாது

ஆமாம்
தயவுசெய்து என்னை எழுதச் சொல்லாதீர்கள்
சேர இயலாத காதலொன்றை